ADDED : ஏப் 03, 2026 06:57 PM
மதுரை: 'தினமும் ஒருவேளையாவது சமைக்காத உணவை (ரா டயட்) சாப்பிடுவது உடலுக்கு நல்லது' என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வுத்துறை தலைவர் நாகராணி நாச்சியார்.
அவர் கூறியதாவது: சமைக்காத உணவில் அவற்றின் இயற்கை சத்துகள், என்சைம்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆப்பிள், வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்கள், கேரட், வெள்ளரி, தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், கீரை, லெட்யூஸ் காய்கறிகள், முளைகட்டிய பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, பாதாம், வால்நட், நிலக்கடலை, சூரியகாந்தி விதைகள், ஆளிவிதைகள், தேங்காய், இளநீரை நேரடி உணவாக சாப்பிடலாம். இதை சமைக்கவோ, பதப்படுத்தவோ தேவையில்லை.
இது உடலுக்கு உயிர்சக்தி அளித்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உடலின் 'அல்கலைன்' சமநிலையை பராமரித்து ஜீரண அமைப்புக்கு ஓய்வு அளிக்கிறது. உணவுகளை சமைக்கும் போது அதிலுள்ள விட்டமின் சி, போலேட் சத்துகள் குறையும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
மேலும் குறைந்த கலோரி, சாப்பிட்டவுடன் திருப்தி காரணமாக உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தோல் ஆரோக்கியமும், உடல் சக்தியும் மேம்படுகிறது. ஜீரணசக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றே 'ரா டயட்' முறைக்கு மாற வேண்டும் என்றார்.
