/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழ் மண்ணில் தேசியம் ஒரு போதும் வீழாது; மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
/
தமிழ் மண்ணில் தேசியம் ஒரு போதும் வீழாது; மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழ் மண்ணில் தேசியம் ஒரு போதும் வீழாது; மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
தமிழ் மண்ணில் தேசியம் ஒரு போதும் வீழாது; மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ADDED : பிப் 23, 2026 05:26 AM

மதுரை: ''தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது,'' என, மதுரையில் அமைய இருக்கும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150 அடி உயர சிலை அடிக்கல் நாட்டும் விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அருகே பி.டி.ஆர்., பொறியியல் கல்லுாரி வழங்கியுள்ள 2.5 ஏக்கர் நிலத்தில், ஏ.சி.எஸ்., அறக்கட்டளை சார்பில் வ.உ.சி.,யின் 150 அடி உயர சிலை அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை வண்டியூர் ரிங் ரோட்டில் நேற்று நடந்தது. புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி பேசியதாவது: வளமிக்க குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரனார், கல்வி பரவலாக்கப்படாத அன்றைய காலத்திலேயே சட்டம் பயின்றவர். ஆங்கிலேய அரசு வழங்கிய சிறை தண்டனைக்கு பிறகு வறுமை அவரை வாட்டியது. அவர் நிறுவிய வழக்கறிஞர் சங்கத்தை ஆங்கிலேய ஆட்சி கலைத்து விட்டதால் சென்னைக்கு சென்று புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து குமாஸ்தா வேலை வேண்டினார்.
தனது தொழிலுக்கு ஆங்கிலேய ஆட்சியால் ஆபத்து நேர்ந்துவிடுமே என அஞ்சி ரூ.5 ஆயிரம் கொடுத்து 'எந்த தொழில் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என வ.உ.சி.,யிடம் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். 'வேலை கேட்டு வந்தேனே தவிர யாசகம் கேட்டு வரவில்லை' என்று தன்மானத்துடன் கூறிய வ.உ.சி., எவ்வளவு கஷ்டம் வந்தாலும் 'வந்தே மாதரம்' சொல்ல தயங்கவில்லை.
இன்று ரூ.5 ஆயிரம் என்றால் எதற்கும் தயாராக இருக்கும் மனிதர்கள் உள்ள நிலையில் அன்று ரூ.5 ஆயிரத்தை துச்சமென எண்ணிய அவரது காலத்தில் வாழாவிட்டாலும் அவரது சிலையை வழிபடுவதில் பெருமை கொள்கிறேன். அப்படிப்பட்ட மனம் கொண்டவர்களிடத்தில் தேசப்பற்று அணையாமல் இருக்கும். தமிழ் மண்ணில் தேசியம் ஒருபோதும் வீழாது. தருமத்தை வீழ்த்தும் சக்தி உலகில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பி.டி.ஆர்., கல்லுாரி சேர்மன் தனவேல் நன்றி கூறினார். வ.உ.சி., வாரிசுகள் சிதம்பரம், செல்வி மற்றும் ஸ்தபதி தியாகராஜன் ஆகியோரை துணை ஜனாதிபதி கவுரவித்தார்.
வ.உ.சி.,க்கு பாரத ரத்னா வழங்க வேண்டும். பார்லி., வளாகத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். துாத்துக்குடி விமான நிலையத்திற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும். சென்னை பெரம்பூரில் கடைசியாக அவர் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு நினைவாலயமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அறக்கட்டளை அறங்காவலர் ரவிக்குமார், இயக்குநர் சுந்தர்.சி, நடிகர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் செங்கோல் ஆதீனம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

