ADDED : நவ 23, 2025 04:19 AM

அலங்காநல்லுார்: வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான், அலங்காநல்லுார் பகுதிகளில் நெல், வாழை, கரும்பு,பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயத்தை செயற்கை ரசாயன உரங்கள் ஆக்கிரமித்தாலும் அடிப்படையில் மண்வளத்தை பெருக்க இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
வயல்களில் ஆடு, மாடுகளை கிடை அமர்த்துவது, நெல் பயிரிடுவதற்கு முன் சணப்பு செடிகளை வளர்த்து வயலில் மக்க செய்வது, தொழு உரங்கள் என இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளன. எருக்கம் செடிதான் விவசாயிகளின் பாரம்பரிய முதல் சாய்ஸ். தொழிலாளர்கள் மூலம் வயல்வெளி, சாலையோரங்களில் பூத்துக்குலுங்கும் எருக்கம் செடிகளை அறுவடை செய்து, உழுது நீர்பாய்ச்சிய வயலில் பரப்பி மக்க செய்வது மண்ணுக்கு உரமாக மாறுகிறது. 'பூத்த எருக்கம் செடிகள் தான் உரத்திற்கு நல்லது. மண்வளமாக இருந்தால் தான் விவசாயம் செழிப்பாக இருக்கும்' என விவசாயிகள் தெரிவித்தனர்.

