/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளைஞர்களுக்கு வேலை வழங்க புதிய பி.எப்., திட்டம்
/
இளைஞர்களுக்கு வேலை வழங்க புதிய பி.எப்., திட்டம்
ADDED : ஜூலை 23, 2025 01:28 AM
மதுரை : தொழிற்சாலை, நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு புதிய 'ஊக்கத் தொகை' திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்த விளக்கக் கூட்டம் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் நடந்தது. துணை பொது மேலாளர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
பி.எப்., மண்டல கமிஷனர் அழகிய மணவாளன், உதவி கமிஷனர் ஆதர்ஷ், செயல் அலுவலர் ஹேமமாலினி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் தென்னக ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு இத்திட்டம் குறித்து பி.எப்., அதிகாரிகள் விளக்கினர். அவர்கள் கூறியதாவது:
தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நிர்வாகங்கள் பி.எப்., பிடித்தம் செய்து அனுப்புகின்றனர். தற்போது மத்திய அரசு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழிலாளர், தொழில் வழங்குவோர் இருவரும் பயன்பெறும் வகையில் புதிய ஊக்கத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.2.9 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தில் 1.8.2025 முதல் 5.7.2027 வரை 'பிரஷ்' ஆக பணியில் சேர்ந்தோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் தொழிலாளர்களுக்கு ஓராண்டில் ஒரு மாத சம்பளம் 2 தவணைகளாக வழங்கப்படும். அதேபோல ஒரு தொழிலாளரை பணியில் சேர்த்ததற்காக, தொழில் வழங்குவோருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனர்.