UPDATED : ஜூன் 01, 2026 07:52 PM
ADDED : ஜூன் 01, 2026 07:51 PM
* தெருநாய்கள் தொல்லை மதுரை தாசில்தார் நகர் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. தனியாக செல்வோரை துரத்தி தாக்குகின்றன. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
- ராமன், தாசில்தார் நகர்.
* பழுதடைந்த ரோடு மதுரை புட்டுத்தோப்பு ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. மழை நேரங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமரகுரு, ஆரப்பாளையம்.
* எரிக்கப்படும் குப்பை வண்டியூர் ஆற்றங்கரையின் கடைசியில் அண்ணா நகர், வண்டியூர் திருமண மண்டபங்களில் சேகரிக்கும் குப்பையை எரிக்கின்றனர். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கின்றனர். புகாரளித்தால், தேவையான குப்பை வண்டிகள் இல்லை என மாநகராட்சி கூறுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராம்குமார், வண்டியூர்.
* ஆக்கிரமிப்பு அட்டகாசம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் வார இறுதி நாட்களில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. பலமுறை புகாரளித்தும் பயனில்லை.
- பிரகதீஸ்வரன், சிலைமான்.
* தெரு விளக்குகள் தேவை மதுரை டோக் நகர் பகுதியில் போதுமான தெருவிளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு பயமாக இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சத்யா, டோக் நகர்.
* குண்டும், குழியுமான ரோடு மதுரை தெற்குவாசல் மேம்பாலம் முன்புள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, புதிய ரோடு அமைக்க வேண்டும்.
- குப்புசாமி, தெற்குவாசல்.
* குடிநீர் இல்லை திருமங்கலம், பள்ளக்காப்புதுப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குறைவான குடிநீர் கிடைக்கிறது. காவிரி குடிநீரும் வருவதில்லை. தனியாரிடம் விலை கொடுத்து வாங்குகின்றனர். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், பள்ளக்காபுதுப்பட்டி.
* இருள் சூழ்கிறது மதுரை நாவலர் நகர் முதல் தெருவில் சில மாதங்களாக தெருவிளக்குகள் செயல்படவில்லை. இப்பகுதி முழுவதும் இருள்மயமாகி திருட்டு பயம் அதிகரித்துள்ளது. பலமுறை புகாரளித்தும் பலனில்லை. உடனே நடவடிக்கை தேவை.
- ராமராஜன், நாவலர் நகர்.
