ADDED : ஏப் 22, 2026 05:50 PM
மதுரை: ''பப்பாளி, மரவள்ளி, பருத்தி, கத்தரி பயிர்களுக்கு பப்பாளி மாவுப்பூச்சிகள் சேதம் விளைவிப்பதால் இதை மேலாண்மை செய்வது அவசியம்'' என்கிறார் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா.
மாவுப்பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதி நரம்புகளில் கூட்டமாக அமர்ந்து சாறை உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு காய்ந்துவிடும். பழங்கள் மீது வெள்ளை மாவுப்படலம் படர்வதால் தரம் குறைந்து சந்தை மதிப்பு பாதிக்கப்படுகிறது. பூச்சிகள் சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகள், பழங்கள் மீது கரும்பூஞ்சை வளர்ந்து ஒளிச்சேர்க்கையைத் தடுக்கிறது.
தாக்குதல் அதிகமாக இருந்தால் செடிகள் வளர்ச்சி குன்றி காய்ந்துவிடும். பூச்சியால் தாக்கப்பட்ட இலைகள், கிளைகளை வெட்டி எரிக்க வேண்டும். வயலைச் சுற்றியுள்ள மாவுப்பூச்சி பரவக்கூடிய களைகளை அகற்ற வேண்டும்.
ஒட்டுண்ணி குளவி அஸரோபாகஸ் பப்பாயே ஒட்டுண்ணி குளவிகளை மாவுப்பூச்சி தாக்கிய இடங்களில் விடுவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம். உயிரியல் பூஞ்சானக் கொல்லிகளான பவேரியா பேஸியானா, வெர்டிஸிலியம் லகானி தலா ஒரு கிலோ என்ற விகிதத்தில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் மாலை நேரங்களில் மாவுப்பூச்சிகளின் மீது படும்படி தெளிக்க வேண்டும். இப்பூஞ்சானங்கள் 5 நாட்களில் நோயை உருவாக்கி மாவுப்பூச்சிகளை அழிக்கும்.
ஒரு ஏக்கருக்கு 40 எண்ணிக்கையில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகள் வைத்தால் மாவுப்பூச்சிகளின் குஞ்சுகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபேனோபாஸ் 50 இ.சி., குளோர்பைரிபாஸ் 20 இ.சி., பியூப்ரோபைசின் 25 எஸ்.சி., டைமித்தோயேட் 30 இ.சி., ஏதாவது ஒன்றை கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 40 கிராம் மீன் எண்ணெய் சோப்பு கலந்து தெளிக்கலாம் என்றார்.
