ADDED : ஜன 28, 2026 06:39 AM

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் உட்பட தாலுகா அலுவலகங்களின் அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கருவூலத்துறை அலுவலகம் அருகே திரண்ட ஓய்வூதியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மணிவண்ணன் கோரிக்கை குறித்து விளக்கினார். ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகி மூர்த்தி, திருவேங்கடராஜ் வாழ்த்திப் பேசினர்.
70 வயது நிறைவடைந்தோருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர் ஆகிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாநில தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

