
லாரி மோதி பலி
மதுரை: அவனியாபுரம் வேலன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 47. முனிச்சாலை தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணியாற்றினார். இரவு பணிக்கு சென்றவர் டிபன் வாங்க கீழமாசி வீதி வெங்காய மார்க்கெட் வழியாக நடந்து சென்ற போது லாரி மோதி பலியானார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரி ஓட்டுநர் ஊமைத்துரையை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வியாபாரி தற்கொலை
மதுரை: உத்தங்குடி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராமர் 50. மாட்டுத்தாவணியில் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்தார். தினமும் குடித்துவிட்டு சென்றதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறப்பு இன்ஸ்பெக்டர் பலி
மதுரை: ஆரப்பாளையம் கண்மாய்க்கரை சத்தியமூர்த்தி தெரு போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் 55. மனைவி அனிதா தனியார் கல்லுாரி பேராசிரியர். பாலமுருகனுக்கு காலில் நரம்பு நோய், உப்புச் சத்து குறைபாடு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
காய்ச்சலுக்கு பெண் பலி
மதுரை: ஆரப்பாளையம் பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சரண்யா 29. காதல் திருமணம் செய்தவர்கள். மதுரை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக வேலை பார்த்தனர். சரண்யாவிற்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. வயிற்று வலி, வாந்தியும் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி முதியவர்கள் பலி
உசிலம்பட்டி: கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் மணி என்ற ஜெயராஜ் 60. நேற்று அதிகாலை தேனி ரோட்டில் நல்லம்மாபட்டி அருகே நடந்து சென்றவர் மீது ஒரு வாகனம் மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* உசிலம்பட்டி: கொங்கபட்டியைச் சேர்ந்தவர் செல்வம் 65. நேற்று காலை கொங்கபட்டியில் மதுரை ரோட்டை கடக்க முயன்ற போது எதிரே வந்த லோடுவேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ மோதி ------------------------------மாணவர் பலி
பேரையூர்: கே.கே.ஜி நகர் ரவிச்சந்திரன் மகன் பிரவீன்பாண்டி 15. இப்பகுதி தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இரவு பேரையூர் காமராஜர் தெருவில் உள்ள இவரது பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காக தனியாக டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். பேரையூர்-உசிலம்பட்டி ரோட்டில் சென்றபோது லாரியை முந்துவதற்காக லோடு ஆட்டோ வேகமாக வந்த போது, இவர் மீது மோதியதில் பிரவீன்பாண்டி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இ- சேவை மையத்தில் திருட்டு
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் 61. தனது வீட்டிலேயே மனைவி மகாலட்சுமி பெயரில் இ சேவை மையம் நடத்துகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். சிகிச்சைக்குப் பின் நேற்று வீடு திரும்பினார்.
அப்போது இ சேவை மைய கதவு, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ந்தார். வீட்டில் இருந்த தங்கச் செயின் உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
பேரையூர்: இத்தாலுகாவில் கம்மாளபட்டியைச் சேர்ந்தவர் ராமன் 47. இவர் தங்கலாச்சேரி அரசு பள்ளி அருகே மது விற்றார். ரோந்து சென்ற எஸ். ஐ. மகாலிங்கம் மற்றும் போலீசார் இவரை கைது செய்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மாணவர்களுக்கு புகையிலை விற்பனை
திருநகர்: விளாச்சேரி அக்ரஹாரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் 46. தனது டீக்கடையில் தடை செய்த புகையிலை பாக்கெட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. திருநகர் போலீசார் அவரது கடையில் சோதனையில் ஈடுபட்டு 144 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜசேகரை கைது செய்தனர்.