ADDED : ஏப் 07, 2025 06:14 AM
கொத்தனாருக்கு கத்திக்குத்து
உசிலம்பட்டி: கொக்குடையான்பட்டி கொத்தனார் ஜெயச்சந்திரன் 35. இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆட்டோ டிரைவர் ரவி 40. சில மாதங்களாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று பகல் 11:30 மணியளவில் ஜெயச்சந்திரன் பேரையூர் ரோட்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே வந்த போது இடைமறித்த ரவி, அவரை கத்தியால் குத்தினார். காயமடைந்த ஜெயச்சந்திரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார்கள் மோதல்: ஒருவர் பலி
பேரையூர்: கேரளா மாநிலம் பத்தினம்திட்டா முகமது நவ்பால் 30. இவர் மதுரை தனியார் ஓமியோ மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். நேற்று காலை கேரளா செல்வதற்காக காரில் தனியாக டி.கல்லுப்பட்டியை அடுத்த கரையாம்பட்டி விலக்கு அருகே சென்றார். அதேநேரம் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் செகுதுமான் 71, இவரது மனைவி பைரோஜா 57, முகமதுகாசிம் 51, ஆகியோர் மதுரை ஏர்போர்ட்டுக்கு காரில் சென்றனர். இருகார்களும் நேருக்கு நேர் மோதியதில் செகுதுமான் இறந்தார். காயமடைந்த பைரோஜா, முகமதுகாசிம் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் பயணியிடம் 20 பவுன் திருட்டு
வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி கார்த்திக் 38, ரயில்வே ஊழியர். இவரது மனைவி சங்கீதா 30, நேற்று முன்தினம் உறவினர் இல்ல விசேஷத்திற்காக தனியார் பஸ்சில் வந்தவர் சமயநல்லுார், ஊர்மெச்சிகுளத்தில் இறங்கினார். அப்போது அவரது கை பையில் வைத்து கொண்டு வந்த 20 பவுன் நகை திருடு போனது தெரிந்தது. சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
திருப்பரங்குன்றம்: மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவுநாள் விழா நேற்று நடந்தது. அதில் பங்கேற்க வந்த கட்சியின் கோவை நிர்வாகி நந்தகுமார் 42, திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றார். அவர் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்பு துறையினர், நந்தகுமார் உடலை மீட்டனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

