ADDED : ஜன 15, 2024 04:05 AM

மதுரை : மதுரையில் நகர் போலீஸ் சார்பில் தல்லாகுளம், திடீர்நகர் போலீஸ் குடியிருப்புகளில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காவல் கட்டுப்பாட்டு அறை, விரல் ரேகை பிரிவு, சைபர் கிரைம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகங்களிலும் பொங்கல் விழா நடந்தது. பல்வேறு போட்டிகளில் போலீஸ்காரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் பரிசு வழங்கினார். துணை கமிஷனர்கள் மங்களேஸ்வரன், பாலாஜி, அனிதா, குமார் பங்கேற்றனர்.
துவரிமான் கிராமத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் நீதிபதிகள் சார்பில் விவசாயிகளுடன் பொங்கல் விழா நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ரஜினி துவக்கி வைத்தார். கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தொழிலாளர் இணை கமிஷனர் சுப்ரமணியன், வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ், குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை இந்தியன் இலவச சிலம்பப் பள்ளி சார்பில் சமத்துவ பொங்கல் விழா செவன்த் டே மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், சிலம்ப பயிற்சியாளர்கள் மணி, வடிவேல், சந்திரா, ஆசிரியை சுலைகாபானு பங்கேற்றனர். உறியடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மதுரை தெப்பக்குளத்தில் மதுரையர் மகளிர் பொங்கல் விழா, தலைவர் திருமுருகன் தலைமையில் நடந்தது. செயலாளர் ரவிசங்கர் முன்னிலை வைத்தார். மதுரையர் இயக்க நிறுவனர் முத்து துவக்கி வைத்தார் வைத்தார். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி ஸ்ரீ பாலமுருகன் பங்கேற்றார். 16 வகை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசியைக் கொண்டு பொங்கல் வைத்தனர். சிறந்த உணவு தயாரித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜெர்மனி நாட்டவர் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மகளிர் அணி செயலாளர் சரோஜினி, புஷ்பலதா, சரண்யா, செயலாளர்கள் விஜயராகவன், காசிராஜன், குகன், நரேந்திர பிரபு, அறிவுமணி, இணைச்செயலாளர் மோகன் செய்திருந்தனர்.
திருநகர்
மதுரை திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லூரியில் தாளாளர் நோவா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நான்கு ஆண்டு மாணவர்களும் தனித்தனியாக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்பு மாணவர்களின் கிராமிய நடனங்கள், பேச்சுப் போட்டிகள், பட்டிமன்றம் நடந்தது.