/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனநல டாக்டர்களின் சேவை அதிகம் தேவை கருத்தரங்கில் தகவல்
/
மனநல டாக்டர்களின் சேவை அதிகம் தேவை கருத்தரங்கில் தகவல்
மனநல டாக்டர்களின் சேவை அதிகம் தேவை கருத்தரங்கில் தகவல்
மனநல டாக்டர்களின் சேவை அதிகம் தேவை கருத்தரங்கில் தகவல்
ADDED : அக் 11, 2024 05:27 AM

மதுரை: ''இந்தியாவில் மனநல டாக்டர்களின் சேவை அதிகமாக தேவைப்படுகிறது. அதே நேரத்தில் டாக்டர்கள் குறைவாக உள்ளனர்'' என மாநில மனநல திட்ட அலுவலர் டாக்டர் சி. ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறை சார்பில் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு நடந்தது. துறைத்தலைவி கீதாஞ்சலி வரவேற்றார். டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லுாரி துணைமுதல்வர் மல்லிகா, மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் ராமசுப்ரமணியன் பேசியதாவது: தேசிய மனநல இயக்கத்தின் 2016 புள்ளிவிவரப்படி இந்தியாவில் 13.7 சதவீதம் பேருக்கு மனநல பிரச்னைகள் உள்ளன. 10.6 சதவீதம் பேருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 43 மனநல மருத்துவமனைகள் தான் உள்ளன. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 67 லட்சம் பேருக்கு மனநல பிரச்னைகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 600 மனநல டாக்டர்களில் 200 பேர் சென்னையைச் சுற்றியுள்ளனர். இங்கே மனநல டாக்டர்களின் சேவை அதிகமாக தேவைப்படும் அதே நேரத்தில் டாக்டர்கள் குறைவாக உள்ளனர்.
பணியிடங்களில் டாக்டர்கள் மற்றும் போலீசாருக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லா மனநோய்களும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தலாம், வராமல் தடுக்கலாம்.
குடும்பத்தில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் மனநல பிரச்னை ஏற்படுகிறது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். வெறும் மாத்திரைகள் மட்டும் பலன் தராது. மனநோயில் இருந்து அவர்களை மீட்டு வேலைவாய்ப்பின் மூலம் மறுவாழ்வு தரவேண்டும். அதுதான் எதிர்காலத் தேவை.
வீட்டில் உள்ளவர்கள் பிரச்னையை சொல்கிறார்கள் என்றால் மற்றவர்கள் அமைதியாக கேட்க வேண்டும். கண்டுகொள்ளாமல் விடும் போதோ அலட்சியப்படுத்தும் போதோ தான் மனநோய், தற்கொலை எண்ணம் உருவாகிறது. மனஅழுத்தத்தை கையாள்வதன் மூலம் பிரச்னையில் இருந்து விடுபடலாம் என்றார்.
டாக்டர்கள் அமுதா, கவிதா, கார்த்திக், அருண் பிரசன்னா, கிருபாகர கிருஷ்ணன், தீபா, சண்முகப்ரியா, பிரபா சாமிராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.