/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரையூரில் பொங்கலுக்கு தயாரான செங்கரும்பு
/
பேரையூரில் பொங்கலுக்கு தயாரான செங்கரும்பு
ADDED : டிச 09, 2024 05:38 AM

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் ஓராண்டு பயிரான செங்கரும்பு சாகுபடி குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஆண்டுதோறும் பயிரிடுவதை இப்பகுதி விவசாயிகள் வழக்கமாக செய்து வருகின்றனர். தாதன்குளம், செங்குளம், கோபிநாயக்கன்பட்டி, முருகனேரி பகுதிகளில் செங்கரும்பு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் துவக்கத்தில் செங்கரும்பு பயிர் நடவு செய்வர். அறுவடை செய்யும் போதே அடுத்த நடவுக்கு என கரும்புத்தட்டைகளை ஒதுக்கி விடுவர். அவற்றை இரண்டு அல்லது மூன்று கணுக்கள் விட்டு துண்டுகளாக வெட்டி விதைக் கரும்பு தயார் செய்வர்.
நீளவாக்கில் வாய்க்கால் போல் பாத்தி கட்டிய வயலில் தண்ணீர் பாய்ச்சி நடவு செய்ய வேண்டும். உரமிடுதல், தோகை உரித்தல், வேர்பூச்சி தாக்குதலில் இருந்து காப்பது என பக்குவமாக வளர்க்க வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சீரான தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
மழைக்காலங்களில் கரும்பு தட்டைகளில் கீழே சாய்ந்து விடாத வகையில் பாத்திகளில் தண்ணீர் தேங்காமல் வடிகால் அமைத்து பக்குவமாக பராமரிக்க வேண்டும். அடுத்த பத்து மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பேரையூர் பகுதியில் சாகுபடியான செங்கரும்புகள் அறுவடை செய்யும் அளவுக்கு தயாராக வளர்ந்து விட்டன.
விவசாயிகள் கூறுகையில், ''ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கரும்பு சாகுபடி செய்துள்ளோம். நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முறை செங்கரும்புக்கு தேவை அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.