இ மயமுதல் குமரிவரை இதயம் ஒன்றுதான்
சமயமென நுாறிருந்தும் சாதி ஒன்றுதான்
இமையசையும் நொடியளவும் பேத(ம்) இல்லையே
உமையவளே துணையெனில்ஓர் ஏத(ம்) இல்லையே
ஆய்ந்தபல நுாறிருந்தும் அகந்தை இல்லையே
வேய்ந்தபல வேலிஎனில் வெறுப்பு இல்லையே
பாய்ந்துவரும் எதிரியெனில் வாளெடுப் போமே
சாய்ந்துவிழும் தோழனெனில் தோள்கொடுப் போமே
வாதங்கள் பலவுண்டு வன்மம் இல்லையே
பேதங்கள் மிகவுண்டு பிரிவும் இல்லையே
பாதங்கள் தடுமாறாப் பாரதம் அன்றோ
வேதங்கள் ஈன்றளித்த தாயே அன்றோ
சாற்றுமொரு நுாறுமொழி சண்டை இல்லையே
வேற்றுமையில் ஒற்றுமைக்கு மாற்று இல்லையே
காற்றுமெம(து) அடிமையடா கலக்கம் இல்லையே
ஏற்றமதே வாழ்வெமக்கு ஏக்கம் இல்லையே
குடியாகக் குடியரசு குடிமை தந்ததே
நொடியேனும் நெஞ்சிலிலை அடிமை என்பதே
முடியாத செயலுமிலை முயற்சி வெல்வதே
விடியாத இரவுமிலை வெற்றி நம்மதே
முடியேறும் மௌலியதில் வீரம் ஏறும்
கொடியேறும் கம்பம்அதில் கொள்கையும் ஏறும்
குடியாகும் பாமரனும் கோமகன் அன்றோ
பிடிசோறும் படிசோறும் பொதுமை அன்றோ
கண்ணியமெம் குடியரசு கருணை உண்டே
புண்ணியமெம் நாடுஎனும் பெருமையும் உண்டே
பெண்ணிமையும் ஆளுமையும் கண்ணே அன்றோ
நண்ணுமெம(து) அன்னைநிலத்(து) ஈடும் உண்டோ
- டாக்டர் எஸ்.மீனாட்சிசுந்தரம் , மதுரை

