ADDED : ஆக 13, 2025 02:17 AM
மதுரை; மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஒருமணி நேரம் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில்வள்ளி விளக்க உரையாற்றினார். நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் ரகுபதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், நிர்வாகிகள் முத்துப்பாண்டி, மணிமேகலை, முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வருவாய்த்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை மேற்கொள்ள அவகாசம், தன்னார்வலர், தனிநிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிக்காக புதிய துணைத்தாசில்தார் பணியிடம் உருவாக்க வேண்டும்.
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனிஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனத்தை 25 சதவீதம் ஆக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட இணைச் செயலாளர் இலக்கியா நன்றி கூறினார்.