ADDED : ஆக 01, 2025 02:21 AM
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கண்டுகுளத்தில் பால்பாண்டியின் கழிவு இறைச்சி கூடம் உள்ளது.
மாட்டின் பாகங்களை கடைகளில் இருந்து எடுத்துவந்து உலர வைத்து கேரளாவுக்கு அனுப்பி வந்தார் பால்பாண்டி. இறைச்சி கூடம் அருகே குடியிருப்புகள் இருப்பதால் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் வயதானவர்கள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
இரு மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் இதற்காக மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவு இறைச்சி கூட்டத்தை மூட உத்தரவிட்டனர். ஆனாலும் தொடர்ந்து இறைச்சிக்கூடம் செயல்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த முத்தையா, அழகர் மாட்டு தோல் பதப்படுத்தும் தொழிலும் செய்தது தெரிந்தது.
கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவின்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இறைச்சி கூடத்திற்கு சீல் வைத்தனர்.