கழிவுநீர் தேங்குது தொற்றுநோய் பரவுது : சிரமத்தில் சின்ன இரும்பாடியினர்
கழிவுநீர் தேங்குது தொற்றுநோய் பரவுது : சிரமத்தில் சின்ன இரும்பாடியினர்
UPDATED : ஆக 16, 2026 07:43 PM
ADDED : ஆக 16, 2026 07:21 PM
சோழவந்தான்: இரும்பாடி ஊராட்சி சின்ன இரும்பாடியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்குவதால் அப்பகுதியினர் மிகுந்த சிரமமடைகின்றனர்.
இங்கு நல்லதங்காள், பகவதியம்மன் கோயில் தெருக்களில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாக்கடைக் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இது கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகள் அருகே தனியார் தோப்புக்குள் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர். க்ஷ
அப்பகுதி சண்முகம் கூறியதாவது: திட்டமிட்டு சாக்கடை கால்வாயை அமைக்காததால் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் தோப்புக்குள் தங்குகிறது. சாதாரண நாட்களிலேயே முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது. மழைக்காலங்களில் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது.
இதனால் தென்னைமரங்கள், செடி, கொடிகள் பாதிப்படைகின்றன. துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அடிக்கடி காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அரிப்பு என தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. தேங்கிய நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் குடியிருக்க முடியவில்லை. ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
