ADDED : ஜூலை 20, 2025 04:44 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் சில நாட்களாக வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடைகளின் தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடைகளில் கறவை மாடுகள், செம்மறி, வெள்ளாடுகள் அதிகம் உள்ளன. கறவை மாடுகளை பெரும்பாலும் வீடு, தோட்டங்களில் கட்டி வைத்து தீவனம் கொடுத்து பராமரிக்கின்றனர்.
செம்மறியாடுகள், வெள்ளாடுகள் அன்றாட மேய்ச்சலுக்காக பல்வேறு இடங்களுக்கு ஓட்டிச் செல்லப்படுகின்றன. சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் ஈரப்பதம் குறைந்து வறட்சி அதிகரித்து உள்ளது. சில மாதங்களாக மழையும் இல்லை.
இதனால் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து விட்டன. ஆடுகளை தினமும் நீண்ட தூரம் ஓட்டிச் சென்று திரும்புகின்றனர். இயற்கை தீவனம் குறைந்துள்ளதால் கறவை மாடுகள் வளர்ப்பவர்களுக்கு தீவனத்திற்காக கூடுதல் செலவு செய்கின்றனர். கால்நடை வளர்ப்போர் தேவைக்கேற்ப தீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். அடுத்தடுத்து மழை பெய்தால் மட்டுமே தற்போது நிலவும் தட்டுப்பாடு நீங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.