ADDED : டிச 14, 2025 06:33 AM
மதுரை: தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.,) நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் இப்பணியை ஆய்வு செய்ய சிறப்பு பார்வையாளராக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் விஜய் நெஹ்ராவை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. சில சட்டசபை தொகுதிகளில் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய வாக்காளர்களிடம் அவர் விசாரணை செய்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இப்பணி தொடர்பான விபரங்களை விஜய் நெஹ்ரா அவர்களிடம் கேட்டறிந்தார்.
பின் தேர்தல் அலுவலர், துணை தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பணியை நல்ல முறையில் தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள விஜய் நெஹ்ரா வலியுறுத்தினார். இத்தகவலை கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார்.
