ADDED : ஆக 05, 2026 03:44 AM
மதுரை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் அமைக்கும் சோலார் மின் அமைப்புகளுக்கு மூலதன மானியம் தேவை என மதுரையில் தொழிற்துறையினர் தெரிவித்தனர்.
தொழிற்துறையினர் கூறியதாவது:
தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன மானியத்தை 25 சதவீதத்தில் இருந்து 30 முதல் 35 சதவீதம் வரை உயர்த்த வேண்டும். தொழில்துறையினர் அமைக்கும் 'ரூப்டாப் சோலார், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ், ஹைபிரிட் சோலார் சிஸ்டம்ஸ், எனர்ஜி மேனேஜ் சிஸ்டம்ஸ்' ஆகியவற்றை இயந்திர முதலீட்டின் ஒரு பகுதியாக ஏற்று சோலார் மின் அமைப்புகளுக்கு மூலதன மானியம் வழங்க வேண்டும்.
தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, புதிய இயந்திரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், ரிமோட் பயன்பாடு, சி.என்.சி. ஆட்டோமேஷன், ஸ்மார்ட் பேக்டரி போன்ற முதலீடுகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு மானியம் வழங்கவேண்டும். கிளவுட் சாப்ட்வேர், சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் உற்பத்தி போன்ற மென்பொருள் முதலீடுகளையும் உற்பத்தி சாதனமாக ஏற்று மானியம் வழங்க வேண்டும்.
தற்போதுள்ள 'கிரெடிட் கேரண்டி (சி.ஜி.டி.எம்.எஸ்.இ.) திட்டத்தின் கீழ் பிணையமில்லா கடன் வரம்பு ரூ.5 கோடியாக உள்ளது. அதை ரூ.10 கோடியாக அதிகரிக்க வேண்டும். புதிதாக தொழில் துவங்கும் பெண் தொழில்முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 10 சதவீத மானியம், குறைந்த வட்டி, விரைவான அனுமதி வழங்க வேண்டும். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு போக்குவரத்து வாடகை, சர்வதேச கண்காட்சி ஆதரவு, ஏற்றுமதி சான்றிதழ், நிறுவன ஊக்குவிப்பு நிதியுதவி மானியம் வழங்க வேண்டும் என்றனர்.
