/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள் பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி
/
மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள் பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி
மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள் பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி
மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள் பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 04, 2026 06:41 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக, வாகன ஓட்டிகளை சோதனைக்கு உள்ளாக்கிய ரோடுகளை பளபளக்க செய்யும் வகையில், ரூ.100.35 கோடி ஒதுக்கப்பட்டு, 27.97 கி.மீ.,க்கு 979 ரோடுகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பணிகளை 'பினாமி' பெயரில் பலர் மேற்கொள்ள உள்ளதால் ரோடுகள் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரோடுகள் மிக மோசமாக இருந்தால் ஆளுங்கட்சியினர் ஓட்டுக் கேட்டு செல்ல முடியாது என்ற நிலையில், அமைச்சர் மூர்த்தி முயற்சியால் தமிழக அரசு இந்த நிதியை மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. தலா ரூ. 2 கோடி வரையில் ஒரு 'பேக்கேஜ்' என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு 'பேக்கேஜ்'க்கு 20 முதல் 25 ரோடுகள் எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல் மொத்தம் 83 'பேக்கேஜ்'க்கான பணிகள் துவங்கியுள்ளன.
புதிய ரோடு டெண்டர்களை மாநகராட்சியில் பதிவு பெற்ற சில ஒப்பந்தக்காரர்களும், அனுபவம் இல்லாத அரசியல் பின்புலம் உள்ளவர்கள் 'பினாமி' பெயர்களிலும் ஒப்பந்தம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதனால் ரோடுகளின் தரம் உரிய முறையில் அமையுமா என கேள்வி எழுந்துள்ளது. இது ரோடு பணிகளை கண்காணிக்கும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
அவர்கள் கூறியதாவது: புதிய ரோடுகள் அமைக்கும் போது அது தரமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு இம்முறை அதிகமாக உள்ளது. அரசியல் பின்புலத்தில் உள்ளவர்களை ஓரளவு மட்டுமே கண்காணிக்க முடியும் என்பதால் எங்களின் கண்காணிப்பு பணிகள் சவாலாகவே இருக்கும். இருப்பினும் ரோடு தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கமிஷனர் சித்ரா கவனம் செலுத்துகிறார். எனவே ஒவ்வொரு நிலையிலும் ரோடுகளின் தரத்தை கண்காணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சற்று கலக்கமாகவே உள்ளது என்றனர்.

