UPDATED : மே 26, 2026 07:29 PM
ADDED : மே 26, 2026 07:20 PM

மதுரை: காலிப் பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட ஓடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மதுரை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மேற்கு நுழைவுவாயிலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓடும் தொழிலாளர் பிரிவு செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் ஆகியோர் பேசுகையில், '' மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 132 காலிப்பணியிடங்கள் உள்ளன. சரக்கு ரயில்களில் லோகோ பைலட்டுகள் ஓய்வின்றி தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இப்பிரிவில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் உள்ளதால், பணியாளர்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைகின்றனர். ரயில்வே வாரியம் நிர்ணயித்துள்ள 30 சதவீத விடுப்பு, பயிற்சிக்கான ரிசர்வ் சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாற்றம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்றனர்.
மூத்த கோட்ட மின்னியல் பொறியாளர் (இயக்கம்) சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று சங்கத்துடன் ஆலோசனை நடக்கிறது. இதன்காரணமாக மருத்துவ விடுப்பு எடுக்கும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
