/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்சோவில் கைதான எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
போக்சோவில் கைதான எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 12, 2025 12:00 AM

மதுரை:மதுரை, திடீர்நகர் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் எஸ்.ஐ., ஜெயபாண்டி, 58. கடந்த டிச., 13ல் திருக்கார்த்திகையன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டது.
இதற்கான பாதுகாப்பு பணியில், இவர் ஈடுபட்டிருந்த போது, சுவாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.
பின்னர் கழிப்பறைக்கு சிறுமி சென்றபோது, ஜெயபாண்டியும் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்கள், உடனே 'சைல்டு லைனுக்கு' தகவல் கூறியதையடுத்து, போலீசார் விசாரித்தனர்.
உண்மை தெரிய வந்ததை தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஜெயபாண்டியை, கமிஷனர் லோகநாதன் 'சஸ்பெண்ட்' செய்தார்.
ஜெயபாண்டி மீதான துறை ரீதியான நடவடிக்கை குறித்து தெரிவிக்காமல், உயரதிகாரிகளின் உத்தரவுபடி போலீசார் ரகசியம் காத்து வந்து உள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், ஜெயபாண்டி விவகாரத்தை பத்திரிகைகளுக்கு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என வாய்மொழியாக அதிகாரிகள் எச்சரித்ததால், இந்த விஷயம் வெளியே கசியாமல் காக்கப்பட்டு உள்ளது.