/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மன உளைச்சலில் மாநகராட்சி ஏ.இ.,க்கள்; ஒதுக்கிய நிதியும் கிடைக்கல என புலம்பல்
/
மன உளைச்சலில் மாநகராட்சி ஏ.இ.,க்கள்; ஒதுக்கிய நிதியும் கிடைக்கல என புலம்பல்
மன உளைச்சலில் மாநகராட்சி ஏ.இ.,க்கள்; ஒதுக்கிய நிதியும் கிடைக்கல என புலம்பல்
மன உளைச்சலில் மாநகராட்சி ஏ.இ.,க்கள்; ஒதுக்கிய நிதியும் கிடைக்கல என புலம்பல்
UPDATED : அக் 15, 2025 07:29 AM
ADDED : அக் 15, 2025 06:28 AM

மதுரை: மதுரை மாநகராட்சி வார்டுகளில் நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஏற்பாடுகளை உதவிப் பொறியாளர்கள் (ஏ.இ.,க்கள்) சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக அரசு ஒதுக்கும் நிதியும் இதுவரை வந்து சேரவில்லை என புலம்புகின்றனர். மக்கள் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி வார்டுகளில் 66 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. 54 முகாம்கள் நடந்துள்ளன. ஒரு முகாம் நடத்த ரூ.30 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமியானா பந்தல் அமைப்பது, சேர், டேபிள்கள், பேன், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்வது, காலை, மதியம் உணவு என ஒரு முகாமிற்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. இது வார்டு உதவிப் பொறியாளர்கள் தலையில் தான் விழுகிறது.
தற்போது வரை முகாம் நடத்தியதற்காக பணம் வழங்கப்படவில்லை. இதனால் மனஉளைச்சல் ஏற்படுவதாகவும், இம்முகாம்களில் ஒரே வகையான மனுக்களே தொடர்ந்து வருகின்றன எனவும் பொறியாளர்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் வார்டு வாரியாக புதிய பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குவதற்காகவும், அதுகுறித்து கணினியில் பதிவேற்றம் செய்வதற்காகவும் சிறப்பு முகாம்கள் இன்று (அக்.,15) முதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் செலவு குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு முகாம்களில் வரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. முகாம்களுக்கு ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் செலவிடப்படுகிறது. சில வார்டுகளில் தாமதமாக வழங்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார்.