ADDED : பிப் 26, 2026 06:15 AM

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில், அனைத்திந்திய நிலைய மேலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.எஸ்.எம்.ஏ.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டத்தலைவர் பிரபு டேவிட் தலைமை வகித்தார். செயலாளர் ராஜிவ் காந்தி முன்னிலை வகித்தார்.தினமும் 24க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் ஸ்டேஷன்களில் பணிபுரியும் ஸ்டேஷன் மாஸ்டர்களை, அறிவிப்பு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும். மதுரை பிரிவில் 12 மணி நேர பணி அமலில் உள்ள14 ரயில்வே ஸ்டேஷன்களில் பணிநேரத்தை 8 மணியாக குறைக்க வேண்டும்.
பணியிட மாற்ற(ஐ.ஆர்.டி.,)விடுவிப்பில் ஒப்புதல் சான்று பெற்ற 29 பேரில் 4 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை ஒப்புதல் சான்று காலாவதியாகும் முன் விடுவிக்க வேண்டும். பொறுப்பு குறைந்த ஸ்டேஷன்களில், உயர் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அனுபவம் இல்லாதவர்கள் முக்கிய ஸ்டேஷன்களில் பணியாற்றும்போது, பயணிகள் பாதுகாப்பு பாதிக்கிறது.
சுகாதாரப் பணிகளை ஸ்டேஷன் மாஸ்டர்களே பார்க்க வேண்டியுள்ளது. எனவே சுகாதார மேற்பார்வையாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சட்ட ஆலோசகர் விஜயராஜன், டி.ஆர்.இ.யூ., கோட்டத் தலைவர் ராஜூ, சங்கர நாராயணன் பங்கேற்றனர்.

