ADDED : மார் 18, 2026 05:21 AM

சோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரத்தில் ரோடு அமைக்கும் பணி திட்டமிடப்படாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசரகதியில் நடப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஜோதி: இரும்பாடி புதுப்பாலம் முதல் கரட்டுப்பட்டி பிரிவு வரை 3.6 கி.மீ.,க்கு ரூ.4 கோடி மதிப்பில் இருவழிப் பாதையாக மாற்ற பணிகள் நடக்கின்றன.
ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. பெயரளவுக்கு மரங்கள்தான் அகற்றப்பட்டன. பழைய ரோட்டை தோண்டி அமைக்காமல், இருக்கும் ரோட்டின் மீதே புதிய ரோடு அமைக்கப்படுகிறது.
இது விதிமீறலாகும். இரும்பாடி, கரட்டுப்பட்டி பிரிவு தடத்தில் புதிதாக 4 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டன. பாலத்தின் அகலத்திற்கு ரோடு அமைக்கப்படாமல் குறுகியுள்ளது.
ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் வாகன போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், ''நெடுஞ்சாலை துறையின் இடங்களை அளவீடு செய்து தரும்படி தாசில்தாரிடம் தெரிவித்துள்ளோம்.
அப்பணி முடிந்ததும் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும். பழைய ரோட்டின் அளவுகள் சாலை மேம்படுத்தும் பணிக்கு பொருந்துவதால் ரோடு அமைக்கும் பணிகள் முறையாகவே நடக்கிறது என்றனர்.

