ADDED : மே 17, 2026 11:17 PM

திருமங்கலம்: மேற்படிப்பு வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லுாரி மாணவர்களிடம், அமைச்சர் நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது.
தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லுாரி, மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்குகிறது.
ஐந்து ஆண்டு படிப்பு முடிந்ததும், மேற்படிப்புக்காக அகில இந்திய ஒதுக்கீட்டை மாணவர்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு போக, தமிழக மாணவர்களுக்கு மிகக்குறைந்த அளவே ஒதுக்கீடு கிடைப்பதால், 80 சதவீத மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேற்படிப்பிற்காக உரிய வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஐந்தாவது நாளாக கல்லுாரி வளாகத்திற்குள் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை நேற்று சந்தித்த, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், ''நாங்கள் தற்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். கால அவகாசம் கொடுத்தால், உங்கள் கோரிக்கையை சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவோம்,'' என்றார்.
அதை எழுதி தருமாறு மாணவர்கள் கேட்டதால், அமைச்சர் பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து கிளம்பினார்.
