ADDED : ஜூலை 24, 2026 12:57 AM

திருப்பரங்குன்றம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். வினாத்தாள் வெளியானது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையிலும் இருநாட்களாக மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன. நேற்று காலை 11:30 மணிக்கு திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் தடுத்தும் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை - திருச்செந்துார் ரயிலை மறித்தனர். தண்டவாளத்தில் படுத்துக்கொண்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. 24 மாணவர்கள், 12 மாணவியர் கைது செய்யப்பட்டனர். அரசு சட்டக்கல்லுாரி மாணவர்களும் கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் சவுராஷ்டிரா, யாதவர், மதுரை, வக்ப்போர்டு, தியாகராஜர் பொறியியல், கருமாத்துார் அருளானந்தர் உட்பட 12க்கும் மேற்பட்ட உதவிபெறும் கல்லுாரிகளில் இப்போராட்டங்கள் நடந்தன. 'மூட்டா' பொதுச் செயலாளர் செந்தாமரைக்கண்ணன் ஒருங்கிணைத்தார். அந்தந்த கல்லுாரிக் கிளைச் செயலாளர்கள் தலைமை வகித்தனர்.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி மூட்டா சங்க பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகிகள் சுரேஷ், சிவசங்கரி, தங்கமுத்து உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
