ADDED : ஏப் 25, 2026 10:02 PM

சோழவந்தான்: திருவேடகத்தில் ரோட்டை மறைத்து கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
பாண்டியராஜன் கூறியதாவது: இங்கு அம்மச்சியார் அம்மன் கோயில் ரோட்டுப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். துாய்மை பணியாளர்கள் குப்பை வாங்க காலை 9:00 மணிக்கு மேல்தான் வருகின்றனர். பல நேரங்களில் வருவதேயில்லை. பகலில் பலர் வேலைக்கு சென்று விடுவதால் பணியாளர்கள் வரும் நேரத்தில் குப்பையை கொடுக்க முடியாமல் தெப்பக்குளம் செல்லும் தெருவின் சந்திப்பில் கொட்டுகின்றனர்.
இதனால் ரோட்டை குப்பை அடைத்து விடுகிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இதை கடந்தே செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாகனங்கள் செல்ல வழியின்றி சிரமம் ஏற்படுகிறது. டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
