/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை தேடி கணக்கெடுக்க வர்றாங்க.. ..: பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்யலாம்
/
மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை தேடி கணக்கெடுக்க வர்றாங்க.. ..: பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்யலாம்
மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை தேடி கணக்கெடுக்க வர்றாங்க.. ..: பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்யலாம்
மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை தேடி கணக்கெடுக்க வர்றாங்க.. ..: பத்து சதவீதம் பாதிப்பு இருந்தாலும் பதிவு செய்யலாம்
ADDED : ஜூலை 11, 2025 03:26 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் வீடுவீடாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிறுபாதிப்பு இருந்தாலும் பதிவு செய்து கொள்வர்.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கணக்கில் வராதவர்கள்
இதனால் மாற்றுத்திறனாளிகள் பற்றிய முழுவிவரங்களையும் கண்டறிய வீடுவீடாக கணக்கெடுப்புக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளனர். இவர்களில் தனித்துவ அடையாள அட்டை (யுனிக் ஐ.டி.,) வைத்திருப்போர் 35 ஆயிரம் பேர். தவிர இன்னும் பதிவுக்கு வராமலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
அனைவரையும் விடுபடாமல் கொண்டுவர கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணி செப்.,30 ல் முடியும். மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 3 நகராட்சி பகுதிகள் என 21 வட்டாரங்களாக பிரித்து ஒவ்வொன்றிலும் தலா பத்து பேர் வீதம் 210 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுகுறைபாடும் பதிவேற்றம்
இவர்கள் 'டேப்லெட்'டுடன் சென்று கணக்கெடுப்பர். பத்து சதவீத பாதிப்பு இருந்தாலும்கூட குறிப்பாக ஒருவிரல் இல்லாமல் இருந்தால்கூட மாற்றுத்திறனாளியாக பதிவு செய்து கொள்வர்.
கணக்கெடுப்பு முடிந்தபின் முகாம் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவர். உறுப்புகள் பாதிப்புக்கு ஏற்ப அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், 'கலெக்டர் ஆலோசனைப்படி பணிகள் துவங்கியுள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு வரும்போது ஆதார், ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டையை காண்பித்து பதிவு செய்ய வேண்டும். அவர்களே மாற்றுத்திறனாளிகளை போட்டோ எடுத்துக் கொள்வர்'' என்றார்.