/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
திருமங்கலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜன 08, 2026 06:02 AM
திருமங்கலம்: கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தால் நிலத்தடி நீர் பாதித்து, நோய் தொற்று ஏற்படுவதாக குடியிருப்போர் திருமங்கலம் நகராட்சியை முற்றுகையிட்டனர்.
திருமங்கலம் ஒன்றியம் வடகரையில் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களின் செப்டிக் டேங்க் கழிவுகளும் லாரிகளில் கொண்டு வரப்பட்டு சுத்திகரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் நீர் அங்குள்ள புல் பண்ணையில் பாய்ச்சப்படுகிறது.
இந்நிலையில் கழிவுநீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து, அந்தப் பகுதி குடியிருப்புகளுக்கு நோய் தொற்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதியினர் சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பா.ஜ., வினர் அந்தப் பகுதி மக்களோடு சேர்ந்து திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், பொதுச் செயலாளர் சரவணகுமார், துணைத் தலைவர் சின்னச்சாமி, மாவட்ட செயலாளர்கள் சரவணன், இளையராஜா, சரவணன் சுப்பையா, பொருளாளர் ராக்கப்பன், நகரத் தலைவர் சசிகுமார், கள்ளிக்குடி கிழக்கு மண்டல் தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.
நகராட்சி கமிஷனர் விடுமுறையில் இருப்பதால், உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

