ADDED : ஏப் 23, 2026 09:52 PM
மதுரை:தக்காளி பயிரைத் தாக்கும் ஊசித்துளைப்பான் பூச்சிகள் இலைகள், தண்டுகளை சுரண்டியும் பழங்களில் ஊசியான துவாரங்களை உண்டாக்கி சேதத்தை அதிகப்படுத்தும்.
இதை கட்டுப்படுத்தும் முறை குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: இதன் புழுக்கள் இலைகளின் திசுக்களை சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளைநிறக் கோடுகள் அல்லது புள்ளிகள் போன்ற தழும்பு ஏற்படும். பழங்களில் சிறிய துவாரம் ஏற்பட்டு உள்ளே அழுகிவிடும். புழுக்கள் தண்டுகளையும் துளைப்பதால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இலைகள், பழங்களை சேகரித்து ஆழமான குழியில் இட்டு புதைக்க வேண்டும். தக்காளிக்கு பிறகு கத்தரி, மிளகாய் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களை பயிரிடுவதை தவிர்த்து பயிர் சுழற்சி செய்ய வேண்டும். பூச்சி தாக்குதல் இல்லாத நாற்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 16 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழித்தால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். சோற்றுக் கற்றாழை, துளசி, ஆடு தின்னா பாலை இலைகளை அரைத்து தண்ணீரில் கரைசலாக தயாரித்து தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
சேதம் அதிகமாக இருந்தால் குளோரண்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீத எஸ்.சி., அல்லது சையாண்ட்ரணிலிப்ரோல் 10 சதவீத ஓ.டி., அல்லது புளுபெண்டமைடு 20 சதவீத டபிள்யூ.ஜி., 60 மில்லி மருந்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என்றார்.
