ADDED : பிப் 13, 2024 03:57 AM

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
இக்கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ.,சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சவுந்தர்யா, நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.
சாட்டையடித்து வாழ்க்கை நடத்தும் சமூகத்தினர் சாட்டையை சுழற்றி அடித்தபடி மனு கொடுக்க வந்தனர். வல்லரசு 1986ல் எங்கள் முன்னோருக்கு பட்டா தரப்பட்டது.
சக்கிமங்கலம் எல்.கே.பி., நகரில் வசிக்கிறோம். தற்போது எங்களில் 350 பேர் படித்தவர்கள், இதில் 15 பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஜாதிச்சான்று இல்லாததால் எந்த வேலைக்கும் செல்ல இயலவில்லை'' என்றார்.
தலையில் சொம்பை சுமந்தபடி வந்த கணேஷ்பாபு என்பவர் கூறுகையில், ''முள்ளிப்பள்ளம் அய்யனார் கோயில் அருகே குளியல் தொட்டி அமைக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சிலர் எதிர்க்கின்றனர். இறுதிச்சடங்கு செய்வதற்கு அது உகந்த இடம் என்பதால் அங்கு குளியலறை அமைக்கவே இப்படி வந்தேன்'' என்றார்.
மனு கொடுக்க வந்த சிந்துபட்டி அருகே மலைச்சாமிபுரம் சுப்பம்மாள் 70, தீக்குளிக்க முயன்றார். அவர் கூறுகையில், ''எனது நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை'' என்றார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தீக்குளிக்க முயற்சிப்பதை தடுக்க கலெக்டர் அலுவலக வளாக பிரதான வாயிலில் போலீசார் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். சுப்பம்மாள் வந்த ஆட்டோவை முழுமையாக சோதனையிட்டிருந்தால் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்திருக்கலாம்.