/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாளும் முதல் துறைமுகம் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத் தலைவர் பெருமிதம்
/
'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாளும் முதல் துறைமுகம் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத் தலைவர் பெருமிதம்
'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாளும் முதல் துறைமுகம் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத் தலைவர் பெருமிதம்
'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாளும் முதல் துறைமுகம் துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத் தலைவர் பெருமிதம்
ADDED : அக் 16, 2025 04:50 AM

மதுரை: இந்தியாவில் 'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாள்வது துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் தான்'' என மதுரையில் நடந்த கடல்சார் விழிப்புணர்வு முகாமில் துறைமுகத் தலைவர் சுஸாந்த்குமார் புரோகித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
துாத்துக்குடி விமான நிலையம் அருகில் 'மெகா ஷிப் பில்டிங் கிளஸ்டர்' அமைப்பதற்காக தமிழக அரசுடன் ரூ.30ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். கொச்சின் துறைமுகம் போல இங்கும் கப்பல்கள் கட்டுமானம் செய்யப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்., ) தயாரிக்கப்பட்டு அதன் பின் டெண்டர் விடப்படும். பணிகள் முடிவதற்கு நான்காண்டுகளாகலாம்.
'கார்பன் நியூட்ரல்' நிலை இத்துறைமுகத்தில் சோலார் பேனல்கள் மூலம் 6 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 2 மெகாவாட் மின்உற்பத்தி தயாரிக்கிறோம். துறைமுகத்தின் மின்தேவையே 8 மெகாவாட் தான். காற்றாலை மூலம் கூடுதலாக 6 மெகாவாட் மின்உற்பத்தி தயாரிக்கும் பணி நடக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை சரக்குகளை கையாளும் வாகனங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் கார்பன் அளவு இன்னமும் குறைய வாய்ப்புள்ளது. 2026 மார்ச்சுக்குள் இலக்கை அடைவோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை பயன்படுத்தி 'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாளும் முதல் துறைமுகம் என்ற பெருமையை வ.உ.சி., துறைமுகம் பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே இங்கு தான் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. திடக்கழிவுகளை மெத்தனாலாக மாற்றும் திட்டம் ஆரம்பநிலையில் உள்ளது. பசுமை மெத்தனால் எனப்படும் எரிபொருள் சேமிப்பு (பங்கர்) மற்றும் நிரப்பும் வசதியும் உருவாக்கும் பணி நடக்கிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் இந்தியாவின் முதல் பசுமை எரிபொருள் கொண்ட துறைமுகமாக பெருமை பெறும்.
'அவுட்டர் ஹார்பர்' எனப்படும் வெளி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.7000 கோடி. தனியார் பங்களிப்பு இல்லாததால் துறைமுகமே பணியை மேற்கொள்ள உள்ளது. 2026 பிப்ரவரியில் வெளி துறைமுக வேலைகள் தொடங்கி 2029க்குள் பணிகள் முடியும். இத்துறைமுகம் வந்துவிட்டால் இப்போதுள்ள சரக்குகளை கையாளும் அளவு (4 மில்லியன் டி.யு.,அளவு) நான்கு மடங்காக அதிகரிக்கும். கப்பல்கள் வரும் நுழைவு வாயிலை 153 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதனால் பெரிய கப்பல்களையும் கையாளமுடியும். இந்தியாவிலேயே பிளாஸ்டிக் இல்லாத துறைமுகமாக மாற்றியுள்ளோம். துறைமுகத்தின் வளர்ச்சி 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு கூறினார்.
தலைமை பொறியாளர் ஸ்ரீனிவாச ராவ் சில்லி, துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தர்ராஜன், போக்குவரத்து மேலாளர் விமல், நிர்வாகச்செயலர் மோகன்குமார் உடனிருந்தனர்.