ADDED : பிப் 02, 2026 05:22 AM
மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 45. இவர் நேற்று மதியம் 2:00 மணிக்கு குரு தியேட்டர் முன்பு ரோட்டை கடக்க முயன்ற போது தேனியில் இருந்து ஆரப்பாளையம் சென்ற அரசு பஸ் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதே பகுதியில், மாலை 4:00 மணிக்கு சிக்கந்தர் சாவடியை சேர்ந்த ரேவதி, 55, ரோட்டை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து கோவை சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
நகரில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 'மாநகரில் 30 சதவீதம் விபத்துகள் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்லும்போது ஏற்படுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என கமிஷனர் லோகநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முடிந்த மறுநாளான நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் அடுத்தடுத்து இருவர் ஒரே இடத்தில் அரசு பஸ்கள் மோதி பலியான சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பஸ்கள் திரும்பி செல்வதற்கான புதிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பிரதான பாதைகள் அடைக்கப் பட்டுள்ளன.
அதிவேகமாக வரக்கூடிய பஸ்கள் திரும்பும் பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. அப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதையை உரிய வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

