/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலிப்பணியிடங்களை எம்.ஆர்.பி., மூலமே நியமிக்க வேண்டும்: மாவட்ட சுகாதார சங்கத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு
/
காலிப்பணியிடங்களை எம்.ஆர்.பி., மூலமே நியமிக்க வேண்டும்: மாவட்ட சுகாதார சங்கத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு
காலிப்பணியிடங்களை எம்.ஆர்.பி., மூலமே நியமிக்க வேண்டும்: மாவட்ட சுகாதார சங்கத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு
காலிப்பணியிடங்களை எம்.ஆர்.பி., மூலமே நியமிக்க வேண்டும்: மாவட்ட சுகாதார சங்கத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 06, 2025 03:48 AM

மதுரை: தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஆய்வக நுட்பநர் நிலை 3, மருந்தாளுநர் மற்றும் செவிலியர் பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் நியமிக்கவேண்டும் என தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார இயக்கம், மருத்துவ கல்வி இயக்ககம், மருத்துவ சேவைகள் துறைக்கான ஆய்வக நுட்பநர் நிலை 3, மருந்தாளுநர் மற்றும் செவிலியர் பணியிடங்களை 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தேசிய சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நியமித்தால் தகுதியானவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வாய்ப்பு கிடைக்காது என்கின்றனர் சங்க மாநில தலைவர் தமயந்தி, பொதுச் செயலாளர் முருகானந்தம், ஒருங்கிணைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன்.
அவர்கள் கூறியதாவது:
ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் கீழ் இதுபோன்ற ஒப்பந்த பணிகளுக்கு மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) மூலம் தேர்வானோர் வேலை செய்கின்றனர். மருத்துவம் சார்ந்த துறைகளில் டிகிரி முடித்து 10 ஆயிரம் பேரும் டிப்ளமோ முடித்து 20 ஆயிரம் பேரும் வேலைக்காக காத்திருக்கின்றனர். தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப எண்ணிக்கையில் நியமிக்கலாம் என்பதால் செவிலியர் துறையில் மட்டும் 200 பேர் வரை நியமிக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கான வேலை வாய்ப்பும் சீனியாரிட்டியும் முறையாக கிடைக்க வேண்டும் எனில் எம்.ஆர்.பி., மூலமே தேர்வு நடைபெற வேண்டும்.
மாவட்ட சுகாதார சங்கம் மூலம் ஆய்வக நுட்பநர் நிலை 3, மருந்தாளுநர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமித்தால் இவர்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்தோ, ஏற்கனவே படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களையோ நியமிக்கும் வாய்ப்பு குறைவு. செல்வாக்குள்ளவர்கள், அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் அங்கீகாரம் இல்லாத டிப்ளமோ படிப்பு படித்திருந்தாலும் பணம் கொடுத்து பணிவாய்ப்பை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. 11 மாத ஒப்பந்தத்திற்கு வருபவர்களிடம் முறையான மருத்துவ சேவையை எதிர்பார்க்க முடியாது. தற்காலிக ஒப்பந்தம் என்றாலும் எம்.ஆர்.பி., மூலம் நியமித்தால் பிற்காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் இவர்களை முறையாக பணி நிரந்தரப்படுத்துவதும் எளிது. ஏற்கனவே தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம், மொபைல் யூனிட் மருந்தகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தான் பணிபுரிகின்றனர். எனவே மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

