'மெகா' இயந்திரத்துடன் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
'மெகா' இயந்திரத்துடன் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : ஏப் 01, 2026 11:35 PM

மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு ஏற்படுத்த 'மெகா சைஸ்' இயந்திரத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் துண்டு பிரசுரம் வினியோகம், ஊர்வலம், நாட்டுப்புற கலைகள், தெருமுனை பிரசாரம், மாதிரி ஓட்டுப்பதிவு, கல்லுாரிகளில் விழிப்புணர்வு என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மகளிர் அமைப்புகள் மூலமும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நேற்று மாட்டுத்தாவணி பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவியர், முதல் முறை வாக்காளர்களுக்கு, சிறிய வாகனத்தில் அமைத்திருந்த 15 அடி உயர 'மெகா சைஸ்' தேர்தல் மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன்குமார் பட்டனை அழுத்தி ஓட்டுப் பதிவை செய்து காட்டினார். மேலும் சாட் ஜி.பி.டி., மூலம் தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமும் பெறப்பட்டது. இந்நிகழ்வில் திட்ட உதவிஇயக்குனர் வானதி, உதவி இயக்குனர் விசாலாட்சி, பயிற்சி உதவி இயக்குனர் ஜனனி, மதுரை ஆர்.டி.ஓ., கருணாகரன், சமூகநல பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ், தாசில்தார் பாண்டி, துணைத்தாசில்தார்கள் மீனாட்சிசுந்தரம், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
