ADDED : ஜூன் 29, 2026 04:59 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் காட்சிப் பொருள்களாக ஏராளமான தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
திருப்பரங்குன்றத்தில் தினமும் பலநுாறு பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஏராளமானோர் கிரிவல ரோட்டில் காலை மாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் வசதிக்காக கிரிவல ரோட்டில் பல இடங்களில் தொட்டிகள் அமைத்து குடிநீர் நிரப்பி வினியோகித்து வந்தனர்.
பக்தர்கள் மட்டுமின்றி தென்பரங்குன்றம் பகுதி குடியிருப்போரும் அந்தத் தொட்டிகளில் குடிநீர் பிடித்து பயன் படுத்தினர்.
கிரிவலம் ரோட்டில் உள்ள பல்வேறு தொட்டிகள் பல மாதங்களாக பயனின்றியும், அவற்றில் குழாய்கள் சேதமடைந்தும் கிடக்கின்றன. இதனால் பக்தர்கள் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.
குடிநீர் தொட்டிகள் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவதற்கே பயன்படுகிறது. பெரிய ரத வீதியில் கவுன்சிலர் அலுலகம் அருகே புதிதாக அமைத்த குடிநீர் தொட்டியும், அமைத்த காலத்தில் இருந்து பயன்பாடின்றிதான் உள்ளது.
இன்று (ஜூன் 29) பவுர்ணமி தினம். குடிநீர் தொட்டிகளை சீரமைத்து தண்ணீர் நிரப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
