ADDED : பிப் 17, 2025 05:48 AM

மேலுார் : மேலவளவில் விவசாயிகள் வலியுறுத்தியும் வேப்பனேரி கண்மாய் மடை உடைப்பை சரி செய்யாமல் காலம் கடத்துவதாக நீர்வளத் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
மேலவளவில் 60 ஏக்கர் பரப்பளவில் நீர்வளத் துறைக்கு சொந்தமான வேப்பனேரி கண்மாய் உள்ளது. புலிப்பட்டி பிரதான கால்வாயில் இருந்து வரும் தண்ணீரால் இக்கண்மாய் நிரம்பி அதன் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கண்மாயில் இருந்து 3 மடைகள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதில் நடுமடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருகிறது.
விவசாயி சிதம்பரம் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்கு முன் தரமற்ற முறையில் கட்டிய மடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கூறியும் சரி செய்யவில்லை. கதிர் அறுவடை முடிந்த வயல்களில் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கோடை பயிர்கள், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கும், மனிதர்கள், கால்நடைகள் பயன்பாட்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சேமிக்க வேண்டிய தண்ணீரை நீர்வளத் துறையினரே வீணாக்குவது பொறுப்பற்ற தன்மையாகும். இனியாவது மடை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், ''உடனே மடை உடைப்பு சரி செய்யப்படும் என்றார்.

