/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாதம் எட்டாச்சு கேசம்பட்டியில் சுகாதார நிலையம் என்னாச்சு
/
மாதம் எட்டாச்சு கேசம்பட்டியில் சுகாதார நிலையம் என்னாச்சு
மாதம் எட்டாச்சு கேசம்பட்டியில் சுகாதார நிலையம் என்னாச்சு
மாதம் எட்டாச்சு கேசம்பட்டியில் சுகாதார நிலையம் என்னாச்சு
ADDED : ஜன 29, 2026 05:32 AM

மேலுார்: கேசம்பட்டியில் கட்டடம் சிதிலமடைந்ததால், துணை சுகாதார நிலையத்தை சமுதாய கூடத்திற்கு மாற்றி 8 மாதங்களுக்கு மேலாகியும், புதிய நிலையம் கட்டாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் சாணிபட்டி, அருக்கம்பட்டி உள்பட 7 கிராமங்களின் 5 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது.
இந்நிலையத்தில் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து, கர்ப்பிணிகளுக்கு தொடர் பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட தேவைகளுக்கு சிகிச்சை பெற்றனர். கட்டடம் சிதிலமடைந்ததால், நிலையத்தை ஊருக்கு வெளியே சமுதாய கூடத்திற்கு மாற்றினர்.
அப்பகுதி ஜீவா கூறியதாவது: புதிய நிலையம் கட்டுவதற்கு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் தீர்வு கிடைக்கவில்லை. மூடப்பட்ட சுகாதார நிலைய சுவர் அருகே குடியிருப்புகள் மீது விழுந்தால் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது.
மேலும் விஷப்பூச்சிகளின் புகலிடமாகவும் மாறிவிட்டது. சமுதாயக் கூடத்தில் தங்கும் வசதி இல்லாததால் செவிலியர் தினமும் வெளியூரில் இருந்து வருகிறார். இரவு நேரம் அவசர தேவைக்கு 5 கி.மீ., தொலைவில் உள்ள சேக்கி பட்டிக்கு செல்கிறோம். அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு புதிய துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும், என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் கூறுகையில், ''சிதிலம் அடைந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய துணை சுகாதார நிலையம் கட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் கேசம்பட்டிக்கு முன்னுரிமை கொடுத்து புதிய கட்டடம் கட்டப்படும் என்றார்.

