/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சமாதான கூட்ட முடிவு என்ன': உயர்நீதிமன்றம் உத்தரவு
/
'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சமாதான கூட்ட முடிவு என்ன': உயர்நீதிமன்றம் உத்தரவு
'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சமாதான கூட்ட முடிவு என்ன': உயர்நீதிமன்றம் உத்தரவு
'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சமாதான கூட்ட முடிவு என்ன': உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 10, 2024 06:51 AM
மதுரை : அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியதில், இது தொடர்பான சமாதான கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை தமிழக அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை முனியசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தைப்பொங்கலையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜன.,15 ல் நடைபெற உள்ளது. இதில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிட்ட சிலரே ஆதிக்கம் செலுத்தினர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின. கிராம குழு அமைத்து மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலமேடு, அலங்காநல்லுாரில் பல்வேறு சமூக பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
அவனியாபுரத்தில் மட்டும் கலெக்டர், வருவாய்த்துறையினர் ஜல்லிக்கட்டு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து சமுதாய பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு: ஒருங்கிணைப்புக்குழுவில் அதிகாரிகள் இடம் பெறுவர். ஆலோசனைக்குழுவில் கிராம சமுதாய தலைவர்கள் இடம்பெறுவர்.
இதில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தீண்டாமை பாகுபாடு எதுவும் இல்லை. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (ஜன.,10) மாலை 4:30 மணிக்கு மேலுார் ஆர்.டி.ஓ.,தலைமையில் சமாதான கூட்டம் நடைபெறும். சுமூக முடிவு ஏற்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் சமாதான கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும். கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதில் எடுக்கும் முடிவு விபரங்களை நாளை (ஜன.,11) அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

