ADDED : மார் 24, 2026 05:16 AM
'மாட்டிகிட்ட' மாட்டு வியாபாரி உசிலம்பட்டி: இத்தொகுதியில் அலெக்ஸ்பாண்டி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் பேரையூர் ரோட்டில் கரையாம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேனில் கேரளா மாநிலம் இடுக்கி மாட்டு வியாபாரி ஜலீல் உரிய ஆவணகளின்றி கொண்டு வந்த ரூ. 65 ஆயிரத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதே குழு வத்தலக்குண்டு ரோடு நடுப்பட்டி அருகில் காரில் வந்த வெள்ளைமலைப்பட்டி ஜெயந்தி-முருகன் தம்பதியிடம் ரூ. 51,240 ஐ பறிமுதல் செய்தனர்.
ரூ.ஒரு லட்சம் பறிமுதல் மேலுார்: வெள்ளலுார் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் குழு சேதுராமன் என்பவர் காரை சோதனையிட்டு ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மொய் பணம் பறிமுதல் பேரையூர்: தாடையம்பட்டி பாண்டி 47. வீட்டில் விசேஷம் வைத்திருந்தார். இதற்கு வந்த மொய் பணத்தில் நகையை திருப்புவதற்காக டூவீலரில் ரூ. 3.63 லட்சத்தை மங்கல்ரேவு அருகே கொண்டு சென்ற போது பறக்கும் படை அதிகாரி செல்வ மீனாட்சி தலைமையிலான குழு பறிமுதல் செய்து உசிலம்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கார்களில் ரூ.1.63 லட்சம் திருமங்கலம்: சந்தைப்பேட்டை பகுதியில் பிரியா 47, என்பவர் காரை சோதனையிட்டு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் செக்கானூரணி பகுதியில் ராமச்சந்திரன் என்பவரது காரில் ரூ. 60 ஆயிரத்து 900ஐ பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
