/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கடலில் படகில் தீ 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
/
கடலில் படகில் தீ 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
ADDED : ஜன 20, 2024 01:40 AM

மயிலாடுதுறை:கடலில் மீன் பிடித்த போது பைபர் படகில் தீப்பிடித்ததால் காயங்களுடன் கடலில் குதித்து உயிர் தப்பிய 6 மீனவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ஆனந்தபாபு என்பவரது பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த அகோர மூர்த்தி,48; தர்மராஜ்,25; ஜீவானந்தம்,25; மணியரசன்,35; சித்திரவேல்,43; தரங்கம்பாடி தாலுகா வெள்ள கோயில் பார்த்திபன்,34; ஆகியோர் நேற்று முன்தினம் மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நள்ளிரவு 20 கடல் மைல் துாரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எஞ்சினில் தீப்பிடித்து பெட்ரோல் டேங்க் வெடித்து படகு தீப்பிடித்து எரிந்தது. அதில், படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன், சித்திரவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து காயம் அடைந்த மீனவர்கள் உள்ளிட்ட 6 பேரும் தீயில் இருந்து தப்பிக்க கடலில் குதித்தனர்.
அதனை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்து, சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீ விபத்தில் பைபர் படகு, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, ஐஸ் பெட்டி உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமம் போலீசார் மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.