ADDED : செப் 20, 2024 11:48 PM

சீர்காழி: சீர்காழி அருகே பெட்டிக்கடை உரிமையாளரை மர்ம நபர்கள் இன்று(செப்.,20) இரவு கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரபிக் 55, இவருக்கு அபூரோஜா கனி என்ற மனைவியும், இரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். முகமது ரபிக் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
தனது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பெட்டிக் கடையிலேயே தங்கி உள்ளார். இவர் கோவில்பத்து கிராமத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவு அவரது பெட்டிக்கடை வாசலில் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட முகமது ரபிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேரில் விசாரணை நடத்தினார். போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.