மயிலாடுதுறை காங்., வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை காங்., வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 05, 2026 03:44 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதிக்கு, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவரை காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, உள்ளூர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை காமராஜர் மாளிகையில் உள்ள மாவட்ட காங்., அலுவலகத்தில், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் திடீர் ஆலோசனை நடத்தினர். அப்போது, மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட, தொகுதியை சேர்ந்த 39 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த நபரை வேட்பாளராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், வேட்பாளரை மாற்ற கோரி, கட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வட்டார தலைவர் அன்பழகன் கூறுகையில், லோக்சபா தேர்தலில் வேட்பு மனு கடைசி நாளில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுதாவை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்தது. தீவிரமாக தேர்தல் பணியாற்றி அவரை வெற்றிபெற செய்தோம். ஆனால் எம்.பி., சுதா மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை மதிக்கவில்லை. தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். தற்போது அவரது ஆதரவாளரன தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.எல்.ஏ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தில் கட்சி அழிவு நிலைக்கு செல்லும். கட்சிக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் யாருக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை. கரூர் எம்.பி., ஜோதிமணி கூறியது போல எம்.எல்.ஏ., சீட்டு விற்பனை செய்யப்படுகிறது என்பது உண்மை.
எனவே, மயிலாடுதுறை தொகுதியில் வசிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கொடுத்து, வேட்பாளரை மாற்றினால் நாங்கள் தேர்தல் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
