/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
சி.பி.சி.எல்.,க்கு எதிரான போராட்டம் பெண்களை கைது செய்ததால் பரபரப்பு
/
சி.பி.சி.எல்.,க்கு எதிரான போராட்டம் பெண்களை கைது செய்ததால் பரபரப்பு
சி.பி.சி.எல்.,க்கு எதிரான போராட்டம் பெண்களை கைது செய்ததால் பரபரப்பு
சி.பி.சி.எல்.,க்கு எதிரான போராட்டம் பெண்களை கைது செய்ததால் பரபரப்பு
ADDED : மே 12, 2024 04:35 AM

நாகப்பட்டினம்: சி.பி.சி.எல்., நிறுவனத்தை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
நாகை மாவட்டம் பனங்குடி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தியதை கண்டித்து, மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கடந்த 11 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போலீசார் கிராமங்களில் அத்து மீறுவதை கண்டித்து நேற்று பெண்கள் சி.பி.சி.எல்., தொழிற்சாலை விரிவாக்கத் திற்கு நடப்பட்ட எல்லை கற்களை பிடுங்கி எறிந்தனர். அதனை போலீசார் தடுக்கவே இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெண்களை பலவந்தமாக துாக்கிச் சென்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து நரிமனத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கிராம பெண்கள் கூறுகையில், ''கிராம மக்கள் கேட்கும் சந்தேகத்தை தீர்த்து வைக்க முயற்சிக்காமல் மாவட்ட நிர்வாகம், போராட்டத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
போராட்டம் நடக்கும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல், கிராம மக்களை அச்சுறுத்துகின்றனர்.
இதனால் கிராமத்தை காலி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம். இதற்கெல்லாம் காரணமான சி.பி.சி.எல்., நிறுவனம் வேண்டாம் என்று தான் எல்லை கற்களை பிடுங்கி எறிந்தோம்'' என்றனர்.