/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
மண்ணுக்குள் புதையும் 'எடை மேடைகள்' மக்கள் வரிப்பணம் பாழாவது தடுக்கப்படுமா?
/
மண்ணுக்குள் புதையும் 'எடை மேடைகள்' மக்கள் வரிப்பணம் பாழாவது தடுக்கப்படுமா?
மண்ணுக்குள் புதையும் 'எடை மேடைகள்' மக்கள் வரிப்பணம் பாழாவது தடுக்கப்படுமா?
மண்ணுக்குள் புதையும் 'எடை மேடைகள்' மக்கள் வரிப்பணம் பாழாவது தடுக்கப்படுமா?
ADDED : மே 26, 2024 12:26 AM

நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் நெல் அறுவடை பருவத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள், லாரிகளில் ஏற்றி சேமிப்பு கிடங்குகள் மற்றும் ரயில்கள் வாயிலாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மூட்டைகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் நாகை, கடற்கரை சாலையில் உள்ள தனியார் எடை மேடையில் எடை போட அணி வகுத்து நிற்கும். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்தன.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பனங்குடி சேமிப்பு கிடங்கின் உட்பகுதி மற்றும் துறைமுக வாயிலில் துறைமுகத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் எடை மேடைகள் அமைக்கப்பட்டன. சில மாதங்கள் மட்டுமே இயங்கிய இந்த எடை மேடைகள் திடீரென நிறுத்தப்பட்டன.
இதையறிந்த நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர், திருமருகல் ஒன்றிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்றப்படும் நெல்மூட்டைகள், பனங்குடி சேமிப்பு கிடங்கு எடை மேடையில் எடை போட்ட பின், இ.சி.ஆர்., வழியாக ரயில் நிலையம் மற்றும் கோவில்பத்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல கடந்த மார்ச்சில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை லாரி டிரைவர்கள் மதிக்காமல் தனியார் எடை மேடைக்கே செல்கின்றனர். இதனால் பனங்குடி, சேமிப்பு கிடங்கில் உள்ள எடை மேடை துருபிடித்து வீணாகி வருகிறது. துறைமுக வாயிலில் உள்ள எடைமேடை மண்ணுக்குள் புதைந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பாழாவதை தடுக்க, இரு எடைமேடைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.