/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கள்ளச்சாராயத்தை ஒழிக்க களமிறங்கிய மக்கள்
/
கள்ளச்சாராயத்தை ஒழிக்க களமிறங்கிய மக்கள்
ADDED : ஏப் 13, 2025 11:41 PM

நாகப்பட்டினம் : நாகை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, ஐந்து கிராம மக்கள் ஒன்று திரண்டு போலீசாரை வரவழைத்து ஆவேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே கடம்பர வாழ்க்கை, மேலவெளி, கொத்தமங்கலம், எல்சியம், கடம்பர வாழ்க்கை மேலத்தெரு ஆகிய ஐந்து கிராமங்களில, 1,500 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக குற்றஞ்சாட்டும் கிராம மக்கள், இப்பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க, ஐந்து கிராம மக்கள் ஒன்று திரண்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், கீழ்வேளூர் போலீசார் வந்தனர்.
கடம்பரவாழ்க்கை கிராம மாரியம்மன் கோவில் வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட பெண்கள், கிராம முக்கியஸ்தர்கள், போலீசார் சார்பில் கீழ்வேளூர் எஸ்.ஐ., அழகேந்திரன் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
சாராய வியாபாரிகளிடம் கீழ்வேளூர் போலீசார் சிலர் சீருடையிலேயே மாமூல் வாங்கி செல்கின்றனர். போலீசார் ஒத்துழைப்பு இருப்பதால், சாராய வியாபாரிகள் கிராமத்தினரை மிரட்டுகின்றனர் என, சராமாரியாக குற்றச்சாட்டுக்களை வைத்து கிராம மக்கள் ஆவேசப்பட்டனர்.
மாமூல் வாங்கும் போலீசார் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எஸ்.ஐ., அழகேந்திரன், கிராமங்களுக்கு வரும் பாதைகளின் முக்கிய இடங்களில் சிசிடிவி பொருத்தி, கள்ளச்சாராயம் கடத்தி வருவோர், மாமூல் வாங்கும் போலீசாரை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.

