/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் வேதனை
/
நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 09, 2025 01:06 AM

நாகப்பட்டினம்:டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மலைபோல் தேங்கியுள்ளன.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்துள்ளது.
பருவம் தவறிய மழையால், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, பெரும் இன்னலுக்கு உள்ளான விவசாயிகள், பெரும் சிரமத்துக்கு இடையில் சம்பா அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது.
நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 62,500 ஏக்கரில் சம்பா, 3,500 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. நாகையில் மட்டும், 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேதமடைவதை தடுக்க, கோவில்பத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கும், அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு ரயில்கள் வாயிலாக உடனுக்குடன் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பரவலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல் மூட்டைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. சில கொள்முதல் நிலையங்களில் கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் கூறுகையில், 'நாள்தோறும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மூட்டைகளை ஏற்றிச் செல்ல ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் லாரியில், 500 மூட்டைகள் மட்டுமே ஏற்ற முடியும்.
'வெயில் அதிகமாக உள்ளதால், நெல் மூட்டைகள் நாள் கணக்கில் திறந்த வெளியில் கிடக்கும் போது, எடை குறைந்தால் ஊழியர்கள் தான் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் மூட்டைகளை அடுக்கி வைக்க, பட்டி அமைக்க சவுக்கு மரங்களும் பற்றாக்குறை என்பதால், விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்' என்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை மண்டல துணை மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''நடைமுறை சிக்கல்களால் நடப்பாண்டு திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் திறக்கவில்லை. நேரடியாக அரவைக்காக ரயில்கள் வாயிலாக அனுப்பப்படுவதால், சில தாமதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.