ADDED : ஏப் 02, 2024 04:42 AM
நாமக்கல்: வர்த்தக நிறுவனங்கள், நடப்பாண்டுக்கான புதுக்கணக்கை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து துவக்கினர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், தமிழ் மாதம் முதல் ஞாயிறு அன்று சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், ஏப்., 1ல் நடப்பாண்டுக்கான புதுக்கணக்கை வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் தொடங்கினர். அதன்படி, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் முட்டை ஏற்றுமதி நிறுவனங்கள், லாரி தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில், புதுக்கணக்கு துவங்கினர். அவ்வாறு கணக்கு துவங்கிய பல்வேறு நிறுவனங்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சுவாமி பாதத்தில் தங்களது கணக்கு நோட்டுகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்து, நடப்பாண்டிற்கான புதுக்கணக்கை துவங்கினர். அதனால், ஆஞ்சநேயர் கோவிலில் தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
