/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்விலை சரிவு: விவசாயிகள் கவலை
/
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்விலை சரிவு: விவசாயிகள் கவலை
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்விலை சரிவு: விவசாயிகள் கவலை
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்விலை சரிவு: விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 09, 2025 01:43 AM
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்விலை சரிவு: விவசாயிகள் கவலை
ப.வேலுார்:-ப.வேலுார் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு பூவன், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. அவ்வாறு பயிரிடப்படும் வாழை, ப.வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்துச்செல்வர்.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று, 600க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வரத்தாகின.
கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், தற்போது, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், 400 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி தார், 350 ரூபாயாக குறைந்துள்ளது. ஐந்து ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு மொந்தன் வாழை, தற்போது, மூன்று ரூபாயாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சேதமடைந்த வாழைத்தார்கள் அதிகளவில் விற்பனைக்கு வரத்தாகின. இதனால், விலை சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.